Saturday, October 24, 2015

நமக்கு நாமே...!!! ஈர்ப்பு...!!!!


அடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ள ஒரு கட்சியின் தலைவன்... தற்பொழுது ஆட்சிப் பணியோ, அரசுப் பொறுப்போ இல்லாத நிலையில், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிப் பணியும் இல்லாத நிலையில்....
அங்கே, இங்கே சென்று ஓய்வெடுத்து பொழுதைக் கழிக்காமலோ அல்லது சுற்றுலா வாசஸ்தலங்களில் சொந்தமாக 800 ஏக்கரில் எஸ்டேட்டும் மாடமாளிகையும் கட்டிக்கொண்டு அங்கிருந்துகொண்டு பணியாற்றுகின்றேன் என்று பீலா விட்டுக்கொண்டிருக்காமல்....
அடுத்ததாக தங்களை ஆள மக்கள் இன்னொரு முறை தமக்கு வாய்ப்புத் தருவார்களேயானால், அதை முன் எப்பொழுதையும் விட சிறப்பாகச் செய்யும் பொருட்டு, மக்களாலேயே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஓய்வு காலத்தை வீணடிக்காமல் மக்களோடு மக்களாக.., அவர்கள் இருப்பிடத்திற்கே... வசிப்பிடத்திற்கே சென்று...
விவசாய நிலத்தின் சேறு என்றால் எப்படி இருக்கும்? அதில் கால் வைத்தால் என்னென்ன மாதிரியான உணர்வு ஏற்படும்? அந்தச் சேற்றில் இருக்கும் புழு, பூச்சிகள், கல்லு முள்ளுகள் எப்படி காலை பதம் பார்க்கும்? உடலும், உடையும் எப்படி அழுக்காகும்?....,
ஒரு டிராக்டர் ஓட்டுவது எவ்வளவு சிரமமான காரியம்? மோசமான சாலைகளில் சைக்கில் ஓட்டுவதும், ஸ்கூட்டி ஓட்டுவதும் எவ்வளவு கடுமையான செயல்? அரசுப் பேருந்துகளின் தரம் எப்படி இருக்கின்றது? அதில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தான எக்ஸர்ஸைஸ், ரோட்டோர டீக்கடை, இட்லி கடை எல்லாம் எப்படி இருக்கின்றது? அதை நடத்துபவர்களின் கஷ்ட நஷ்டங்கள் என்னென்ன? அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன?....
10 பேர் முதல் 100 பேர் வரை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்யும் சிறு குறு தொழிற்சாலைகள் உண்மையில் எப்படி இருக்கின்றன? அதில் வேலை செய்பவர்களின் நிலை எப்படி இருக்கின்றது? அதை நடத்துகின்றவர்கள் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சினைகள் என்னென்ன?...,
ஒவ்வொரு ஊரிலும் தினம் தினம் கடைத்தெருவில் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்லும் மக்களின் தேவைகள் என்னென்ன? அவர்களுக்கு இன்னும் தேவைப்படும் வசதிகள் என்னென்ன? மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்த பெண்களின் இன்றைய நிலை என்ன, அவர்களின் தேவைகள் என்னென்ன?...,
மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் என்ன, அவர்களுக்கான கோரிக்கைகள் என்னென்ன? விவசாயிகள் படும் பாடு என்ன, அவர்களது உண்மையான தேவைகள் என்னென்ன? ஓய்வு பெற்ற முதியோர்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களுக்கான தேவைகள் என்னென்ன? வேலையில்லா பட்டதாரிகளின் நடப்பு நிலை என்ன, அவர்களின் மனக்குமுறல்கள் என்னென்ன?...,
குடும்பத்தலைவிகளாக மட்டுமே இருக்கின்ற பெண்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கின்றனர்...,, மலைக்கிராமத்து மக்களின் பிரச்சினைகளும், தேவைகளும் என்ன, கடற்கரையோர மக்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள், தேவைகள் என்னென்ன? வறட்சி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் என்ன, தேவைகள் என்னென்ன?...
இப்படியாக, அனைத்தையும் அனைவரையும், அங்கங்கேயே தேடிச் சென்று, முழுமையான கள ஆய்வை, அந்தத் தலைவன் செய்து கொண்டிருக்கின்றான்.
மக்கள் அந்தத் தலைவனை தேடி ஓடி வருகின்றார்கள். ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் விவசாயிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டுவிட்டார், இன்னொரு பகுதியில் மீனவர்களைச் சந்திக்க மட்டுமே நேரம் இருக்கின்றது, என்கிற போது, இங்கிருக்கும் விவசாயிகளுக்கு கோபம் வருகின்றது. இல்லையில்லை, நாங்கள் அவரைப் பார்த்து எங்கள் குறைகளை நேரில் சொன்னால் தான் திருப்தியாக இருக்கும் என்று உரிமையோடு சண்டையிடும் போது...
பெரிய அளவில் அதிர்ந்து தான் போக வேண்டியிருக்கின்றது. இவர் தான் நம்பிக்கைக்குறிய மனிதர், இவரைத்தான் அடுத்து ஆட்சியில் அமர்த்தவிருக்கின்றோம், இவரிடம் இப்பொழுதே, நம் குறைகளை, தேவைகளை சொல்லிவிட வேண்டும் என்ற அந்த விவசாயிகளின், தொழில் முனைவோர்களின், வியாபாரிகளின், பெண்களின், மாணவ, மாணவிகளின் ஆர்வத்தையும், அவசரத்தையும் நன்றாக உணர முடிகின்றது.
இவர் செல்லும் இடங்களில் எல்லாம் நடப்பு ஆட்சியாளர்கள், தங்களது சாதனையாக சில காமெடிகளை எழுதி பேனர் வைத்து நிறப்பிக்கொண்டிருக்க, மக்களோ, தஙகளது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி இவரிடம் தந்து விட ஓடி வருகின்றார்கள்.
இவர் வாயால், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்ற உத்திரவாதம் பெற்றவுடன், வாழ்க்கையைத் துவங்கும் போதே கடனாளியாக தவித்து நிற்கின்றோமே என்று எண்ணித் தவித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும், பட்டதாரிகளும் துள்ளிக் குதித்து இவருக்கு செம்மையாக ஒரு ஓ போடுகின்றனர்.
இப்படி நேரடியாக ஒரு கள ஆய்வினை முடித்து நாளை ஆட்சிக்கு வரும் வாய்ப்புக் கிட்டிடுமேயானால், நிச்சயமாக மக்கள் தேவைகளை இவருக்கு எடுத்துச் சொல்ல, புத்தகப் புழுக்களான அதிகாரிகளின் உதவியோ, பல்வேறு நிலைப்பாடுகளில் இருக்கும் அமைச்சர்களின் உதவியோ இவருக்குத் தேவையில்லை. அனைத்தையும், அனைவரையும் நேராகக் கண்டு, பேசி, கருத்துப் பறிமாற்றம் செய்து வந்திருக்கின்றார். இவருக்கும் மக்களுக்கும் இடையில் இனி எந்த இடைத்தரகரும் தேவையில்லை...!
நிச்சயம் ஒரு நல்லாட்சியை இவர் தந்தே தீருவார். மக்களிடம் அந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
திமுக தொண்டர்கள் எல்லோரும், இவர் வருவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து விட்டு, இவர் வரும் பொழுது, மக்களிடம் இவரை விட்டுவிட்டு தாமாக விலகிச் சென்று நிற்கின்றார்கள். அவர்களுக்கு இது புது அனுபவம் தான்.... ஆனாலும் இதை ரொம்ப சந்தோஷமாகத்தான் செய்கின்றார்கள். காசு கொடுக்காமல், குவாட்டர் வாங்கித்தராமல், வேன் வைக்காமல் இவ்வளவு பேர் அவரைப் பார்க்க வேண்டும் என்று தங்களிடம் கோரிக்கை வைப்பதை பெருமையாக உணர்கின்றார்கள்.
தங்களது செயல்பாடுகளிலும் தங்கள் தலைவனைப் போன்று பக்குவமான, முதிர்ச்சியான, மக்கள் விரும்புகின்ற வகையிலான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று பலர் முனைப்பு காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
எதிர்களின் கிண்டல், கேலிகள், விமர்சனங்கள் அனைத்தையும் புறம் தள்ளி விட்டு முழுமையான வெற்றிப் பயணமாக, இதோ மூன்றாவது கட்டத்தில் நாளை மறுநாள் சேலத்தில் மையம் கொள்கிறது...!!

வாருங்கள்...   மக்கள் மனங்களை வெல்லுங்கள் தளபதியாரே...!



No comments: