Tuesday, October 9, 2012

விமர்சனம் மாதிரி...!!


கடுமையான மின் தடையோடு போராடி கடந்த மூன்று நாட்களில் சுந்தர பாண்டியன் படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து முடித்தேன்.

இப்பல்லாம் இந்த மாதிரி லைட் மைண்டட் படங்கள் தான் ரொம்ப பிடிக்குது. அந்தக்கால கார்த்திக்-பிரபு  படங்களிலிருந்து 50 சதவிகிதமும், ராமராஜன் படங்களிலிருந்து 25 சதவிகிதமும், ஆர். சுந்தர்ராஜன் - ரங்கராஜ் படங்களிலிருந்து 25 சதவிகிதமும் கலந்த ஒரு கலவையாக இந்தப் படம் வந்திருக்கின்றது.

பாடல்கள் மட்டும் ஹிட் ஆகியிருந்தால் இந்த வருடத்திய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இது அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சசிகுமார் சம்பந்தப்பட்ட படங்களில் இருக்கின்ற வக்கிர காட்சிகளில் பாதி கூட இதில் இல்லை என்றாலும், இருப்பதையே இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால், பார்வையாளர்களுக்கு இந்தப் படம் இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தைக் கூடுதலாக கொடுத்திருந்திருக்கும்.

ஒரு குடும்பத்தில் தாத்தா-பாட்டி, தாய்-தந்தை, பேரன் - பேத்திகள் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கின்ற படங்கள் தான் வெள்ளித் திரையில் வெள்ளி விழா காண்கின்றன. இந்த ஃபார்முலா ஏன் எந்த டைரக்டருக்கும் தெரியவில்லை என்றே புரிய மாட்டேன் என்கிறது.

குடும்பத்துடன் படம் பார்க்கக் கூடியவர்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்? முதலில் மிகத் தெளிவான ஒரு கதை. பார்க்கும் போது மனதை அதிகமாக பாதிக்க வைக்காத வக்கிரக் காட்சிகள் மற்றும் சோகங்கள். அடுத்ததாக படம் நெடுகிலும் (திணிக்கப்படாத) கதையின் முக்கிய கதா பாத்திரங்களோடு பின்னி பிணையப்பட்ட இயல்பான நகைச்சுவை. கண்களையும், காதுகளையும் படுத்தி எடுக்காத ஒளி, ஒலிச் சேர்க்கை இல்லாத ரம்மியமான பாடல் காட்சியமைப்புகள்.

பாடல் காட்சிகளின் போது அழகான நாயகன் - நாயகியின் தெளிவான முக பாவனைகளைக் காட்டும் குளோசப் காட்சிகள். படம் ரிலீஸுக்கு முன்பே நன்கு ஹிட் ஆன பாடல்கள்.

ஓரிரு செண்டிமெண்ட் காட்சிகள், நறுக்குத் தெரித்த வசனங்கள். தேவையெனில் வக்கிரமில்லாத சண்டைக் காட்சிகள்......

அவ்வளவு தான்! மேற் சொன்னவற்றில் 60 சதவிகிதத்தைக் கடந்து விட்டார் சுந்தர பாண்டியன். இன்னும் ஒரு 20 சதவிகிதத்திற்கு முக்கியிருந்தால் இந்த வருடத்தில் வெள்ளித்திரை வெள்ளிவிழாவை இந்தப் படம் கொண்டாடியிருக்கும் என்பது என் எண்ணம்.

1 comment:

சேலம் தேவா said...

இந்தக்கலவையை அப்பப்ப மிஸ் பண்ணிடறாங்கண்ணே...