Thursday, May 31, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் புறக்கணிப்பு - கலைஞரின் முடிவு சரிதானா?

புதுக்கோட்டையில் வேட்பு மனு தாக்கல் எல்லாம் முடிந்து தேர்தல் களம் உண்மையான வெப்பநிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் நேரடிப் போட்டி என்பது உறுதியாகி விட்டது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி முடியும் வரையிலும் கூட திமுகவினருக்கும், மற்ற அரசியல் பார்வையாளர்களுக்கும் கடைசி நிமிடத்தில் மனம் மாறி கலைஞர் களமிறங்கி விடுவாரோ என்ற எண்ணம் இருந்து கொண்டு தான் இருந்தது.

மக்களைப் பொருத்தவரை திமுகவின் இந்த இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை தவறு என்று சட்டென நிராகரித்துவிட முடியவில்லை. ஏனெனில் அதிலுள்ள நியாயமான காரணத்தினையும் அவர்களால் இலகுவாக கடந்துவிட முடியாது என்ற நிலையிலிருக்கின்றார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திமுக களத்தில் இல்லாதது கூட அவர்களுக்கு ஒரு வித நிம்மதியைத் தந்திருப்பது போலத்தான் தோன்றுகிறது.

காரணம் ஆளும் அரசு தங்கள் தொகுதிக்கு இந்த குறுகிய காலத்தில் செய்து முடித்திருக்கும் சில உட்கட்டமைப்பு வசதிகளும், செய்யவிருக்கின்ற சில மேற்படி விஷயங்களும், ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த முதல்வரிடமிருந்து அடுத்த மூன்றரை ஆண்டுகளும் எதாவது நல்லது கெட்டதுகளை செய்து கொள்ள இயலும் என்று புரிந்து வைத்திருப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக இது ஆட்சி மாற்றம் எதையும் கொண்டு வந்திடாது என்ற புரிதலும்....  ஆகிய காரணிகளால் திமுகவின் முகத்தில் கரி பூசும் தர்மசங்கடம் இல்லாமல் போனதே என்ற குற்ற உணர்வில்லாத மனநிலையோடு இருப்பதும் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் அரசியல் விமர்சகர்களும், திமுகவின் எதிராளிகளும் கலைஞரின் இந்த முடிவு, திமுக தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் மாதிரியானது என்று கேலி பேசுகின்றார்கள். தேமுதிகவின் வளர்ச்சிக்கு கலைஞரே பாதை அமைத்துத் தந்துவிட்டார் என்றும் ஆரூடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், புதுக்கோட்டை தொகுதி திமுகவினர் எல்லாம் அதிமுகவுக்கு எதிரான தங்கள் மனநிலையை வெளிப்படுத்த தேமுதிகவுக்கு வாக்களிப்பதன் மூலம், அக்கட்சிக்கு கிடைக்கும் வளர்ச்சியை அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கான மாற்றுக் கட்சி என்ற அந்தஸ்த்திற்கு கொண்டுவந்துவிடும் உத்தியை, ஆரிய ஊடகங்கள் கச்சிதமாக செய்து முடிக்கும் என்றும் கனவு காண ஆரம்பித்து விட்டார்கள்!

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இந்த மாதிரியான பேச்சுக்கள் நடைமுறை சாத்தியக்கூறுகள் உள்ளவை தான் என்று நம்மை நம்ப வைத்தாலும், இவ்விஷயத்தில் கலைஞரின் கணக்கு வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

தமிழகத்தில் முதன் முறையாக 1967 இல் காங்கிரஸ் வீழ்த்தப்பட்ட பிறகு, 1991 தேர்தல் வரையிலும் அக்கட்சிக்கு சராசரியாக 15 சதவிகித வாக்குகள் இருந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. இந்த காலகட்டத்தில், தலா முப்பதிலிருந்து முப்பத்தைந்து சதவிகிதம் வரை வாக்கு வங்கியை வைத்திருக்கும் திமுக அல்லது அதிமுக ஆகிய எந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும் அக்கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்பது தான் இங்கு எழுதப்படாத சட்டமாக இருந்து வந்துள்ளது.

அதன் பிறகு தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில், வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கும் கணிசமான வாக்கு வங்கிகளைக் கொண்ட பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற ஜாதிக் கட்சிகளின் வளர்ச்சியும், ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் எடுத்த தவறான நிலைப்பாடும், வெற்றிக் கோட்டைத் தாண்டி தங்கள் கூட்டணிக் கட்சியை கொண்டு செல்லும் காங்கிரஸின் அந்த வாக்கு வங்கியை கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவிப் போக வைத்தது தான் மிச்சம்.

இந்த நிலையில், காங்கிரஸ் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தில் வாகாய் வந்து அமர்ந்து கொண்டது தான் தேமுதிகவின் தற்பொழுதைய பலம். தமிழகம் தழுவிய அளவில் சராசரியாக பத்திலிருந்து பன்னிரெண்டு சதவிகித வாக்கு வங்கியினை சேர்த்திருக்கும் அக்கட்சி, இனி யாருடன் கூட்டணி அமைக்குமோ அது தான் ஆளும் கட்சி என்ற நிலைமைக்கு வந்திருப்பதற்கு, கடந்த தேர்தலே ஒரு சிறந்த உதாரணம்.
                        
1991 தேர்தலில் முதன் முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியைப் பிடித்ததற்கு, ராஜீவ் காந்தியின் மரணத்தால் வந்த அனுதாப அலை தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனாலும் அதை சட்டமன்றத்திலேயே மறுத்துப் பேசிய தற்பொழுதைய முதல்வர், விஜயகாந்த்தின் தேமுதிக தான் இந்த முறை தான் ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கான காரணம் என்பதை மனதார ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்க இயலுமா.....?

இயலாது தான். ஆனாலும் தேர்தல் என்று வருகின்ற போது, அதில் வெற்றியடைய வேண்டும் என்பது தலையாய பிரச்சினையாக உருவெடுக்கின்ற போது இந்தப் பக்கம் சிலரும், அந்தப்பக்கம் சிலருமாக கண்ணை மூடிக் கொண்டு கசப்பு மருந்தை உட்கொள்வது போல சகித்துக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றவுடன் அந்த வலியெல்லாம் மறந்து போகும் என்று மகுடி ஊதி, மீண்டும் அந்தக் கூட்டணி அமைந்து விட்டால்?

அதிமுக - தேமுதிக என்ற அந்த வெற்றிக் கூட்டணி தானே வெல்லும்? 35 + 12 +சில உதிரிக் கட்சிகளைச் சேர்த்தால் போதும் 50+ வாக்குகள் வாங்கி எளிதில் வென்றுவிடலாமே?!

மீண்டும் 30+ சதவிகித வாக்கு வங்கியினைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக திமுக விளங்கினாலும், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகக் கூட வர இயலாமல் மண்ணைக் கவ்வும் சோகம் தானே திமுகவுக்கு ஏற்படும்?

இந்த மனக்கணக்கைத்தான் கலைஞர் நிதானமாக போட்டுப் பார்த்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்ற முடிவை அறிவித்திருக்க வேண்டும்.
                                             

சரி அந்த மனக்கணக்கு கூட ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் அதற்கும், புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கும் என்ன சம்பந்தம்? அதனால் திமுகவுக்கு என்ன லாபம்?

நல்ல கேள்வி. இப்பொழுது இடைத்தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தேமுதிகவின் ஒரே குறி அதிமுக தான். இத்தேர்தலில் வென்றால் தமிழகத்தில் ஆட்சியையே பிடித்த மாதிரியான ஒரு நிலை உருவாகும். இப்படியொரு வாய்ப்பை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா? சுற்றிச்சுழல ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் பலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதிமுகவை மிக அதிக பட்சமாக எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.......

அதிமுகவினரோ, இவர்களை பத்து சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் வாங்க அனுமதித்தால் அது தங்கள் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் ஊழியர் கூட்ட செய்திகளும் அவ்வாறே வெளிப்படையாக அறிவிக்கின்றன. சாதாரணமாகவே விஜயகாந்தின் டிமாண்ட் (தேர்தல் இடப்பங்கீட்டில்) அதிகமாக இருக்கும். இந்தத் தேர்தலில் 15 சதத்திற்கு மேல் வாக்குகளை அள்ள அவரை அனுமதித்தால் அடுத்த தேர்தல் இடப்பங்கீட்டில் அவரது டிமாண்ட் மிக அதிகமானதாக இருக்கும்.

அப்படியொரு நிலை உருவானால் அதற்கு அதிமுகவும் சம்மதித்தால் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து போய் விடும். அப்படியொரு நிலையை ஜெயலலிதாவால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. ஆகையால் இந்த இடைத்தேர்தலோடு விஜயகாந்த்தின் தேமுதிகவை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற மன நிலையோடு தான் அதிமுக களப்பணிகளைச் செய்ய முற்படும். அப்படித்தான் அங்கு செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

ஆகையால் இந்த இடைத்தேர்தல் முடியும் போது அதிமுகவும் தேமுதிகவும் இனி எப்பொழுதும் கூட்டணி அமைக்க இயலாத அளவிற்கு எதிரிக் கட்சிகளாக மாறிப் போயிருக்கும்! தேமுதிக ஒரு வேளை டெபாசிட் வாங்காவிட்டால், அதிமுகவினர் பேசிப் பேசியே அவர்களை குத்திக் குதறியெடுத்து விடுவார்கள்.

 ஒருவேளை தேமுதிக 15 சதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால், அவர்கள் ஆடும் ஆட்டத்தைப் பொறுக்க இயலாமல், ஜெயலலிதா அக்கட்சியை சிதறடிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதோடு, எதிர்காலத்தில் அக்கட்சியோடு கூட்டணி என்ற சமரசத்திற்கு வரும் வாய்ப்பும் அடியோடு தகர்ந்து போகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விரு கட்சிகளின் தொண்டர்களும் எதிர் காலத்தில் இணைந்து பணியாற்றும் சூழல் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும். அப்படியே ஒரு சிலரின் சீரிய முயற்சியினால் அக்கூட்டணி அடுத்த தேர்தலில் அமைந்தாலும், "கூடா நட்பு கேடாய் விளையும்" என்று தான் விளைவுகள் இருக்கும்.

ஆக புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற கலைஞரின் முடிவு, ஆகச் சிறந்த ராஜ தந்திரத்தின் வெளிப்பாடு என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை!!!


 




26 comments:

Anonymous said...

Congratulations!!! Expecting your pathivugal regularly.

rajamelaiyur said...

//காரணம் ஆளும் அரசு தங்கள் தொகுதிக்கு இந்த குறுகிய காலத்தில் செய்து முடித்திருக்கும் சில உட்கட்டமைப்பு வசதிகளும், செய்யவிருக்கின்ற சில மேற்படி விஷயங்களும்
//

ஆனால் திருமங்கலம் பார்முலா என்று ஆரம்பித்தது தி மு க தானே .. ஆளும் பொது அராஜகம் செய்தாவது வெற்றி பெறுவதில் இரண்டு கட்சிகளும் சளைத்தவை அல்ல

கொக்கரக்கோ..!!! said...

@என் ராஜபாட்டை ராஜா,

திருமங்கலம் ஃபார்முலா எல்லாம் கடந்த மூன்று வருடங்களாக அரசியல் படிப்பவர்கள் சொல்லும் பாடம். முதன் முதலில் திருச்செந்தூர் ஃபார்முலாவை உருவாக்கியது எம்ஜிஆர் தான். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அந்த ஃபார்முலா புதிய பரிமாணம் பெற்றது அவ்வளவு தான்.

மேலும் அதிமுகவை தனியாக குற்றம் சாட்ட உங்களுக்கு எல்லாம் ஏன் இவ்வளவு பயம் ராஜா?! ))

rajamelaiyur said...

எல்லாம் கருணாநிதி அவர்களிடம் கற்ற வித்தைதான் . யார் என்ன குறை சொன்னாலும் ஏன் ஆ தி மு கா வில் நடக்க வில்லையா என கேட்பது ...

இருவருமே இல்லாமல் ஒரு நல்ல கட்சி வருமா என காத்திருக்கும் கோடிகணக்கான அப்பாவி வாக்காளர்கலீல் ஒருவன்

rajamelaiyur said...

//திருமங்கலம் ஃபார்முலா எல்லாம் கடந்த மூன்று வருடங்களாக அரசியல் படிப்பவர்கள் சொல்லும் பாடம். முதன் முதலில் திருச்செந்தூர் ஃபார்முலாவை உருவாக்கியது எம்ஜிஆர் தான்.
//

இப்ப கூட பாருங்கள் நாங்கள் செய்யவில்லை என சொல்ல வில்லை . அவர்கள் செய்தார்கள் நாங்கள் செய்ய கூடாதா என தான் கேட்கின்றேர்கள்

rajamelaiyur said...

இப்ப கூட பாருங்கள் நாங்கள் செய்யவில்லை என சொல்ல வில்லை . அவர்கள் செய்தார்கள் நாங்கள் செய்ய கூடாதா என தான் கேட்கின்றேர்கள்

கொக்கரக்கோ..!!! said...

@ என் ராஜபாட்டை ராஜா,

உங்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள் )))

அதுவரை இருப்பதில் நல்லதாக எனக்கு திமுக தான் படுகிறது.

ராஜ நடராஜன் said...

தற்போதைய நிலையில் தி.மு.க இன்னும் நொண்டிக்குதிரையே.தனது நொண்டிக்குதிரை மேல் சின்ன பந்தயத்திற்கு ஏன் பணம் கட்டவேண்டுமென்று கலைஞர் நினைத்தது சரியான முடிவே.மேலும் ஜெயலலிதாவையும்,விஜயகாந்தையும் மோத விடுவதன் மூலம் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் கூட்டணியை அடுத்த தேர்தலுக்குள் நிரந்தரமாக பிரித்து விடலாமென்ற நீண்ட கால திட்டமாக கூட இருக்ககூடும்.

ராஜபாட்டை ராஜா ஆளும் போது அராஜகம் செய்தாவது வெற்றி பெறுவதில் இரண்டு கட்சிகளும் சளைத்தவை அல்ல என்று சொல்வது நடுநிலையாகத்தானே இருக்கிறது!

இதிலென்ன பயமா!இருக்குற பெட்ரோல் விலையில் ஆட்டோவாவது,சுமோவாவது:)

ராஜ நடராஜன் said...

கொக்கரக்கோ!இருப்பதில் நல்லதாக தி.மு.கவே கோஷம் உங்களிடமிருந்து தொடர்ந்து ஒலிக்கிறது.

கண்மணிகளுக்கு தன் கட்சி பொன் கட்சிதானே:)

நான் இன்னும் டெசோவுக்காக காத்திருக்கிறேன்.ஒரு வேளை டெசோ திமுக வின் தலைவிதியை நிர்ணயிக்கும் கிரியா ஊக்கியா அல்லது புஸ்வானமா?

கொக்கரக்கோ..!!! said...

வாங்க ராஜ நடராஜன்....

திமுக என்பது ஆரிய ஊடகங்கள் எழுத்துக்களிலும், அதைப் படிக்கும் அல்லது பார்க்கும் உங்களைப் போன்ற நடுநிலையாளர்களின்(?!) பார்வையிலும் நொண்டிக் குதிரையாகத் தெரியலாம். ஆனால் அது இன்னும் வீரியம் மிக்க தொண்டர்களோடு பலமான கட்சி அமைப்புகளோடும் கம்பீரமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அப்படியில்லை என்றால் ஒரு நொண்டிக் குதிரைக்கு ஆதரவாக யார் எழுந்தாலும் வந்து இத்தனை பேர் பல தளங்களிலும் பதில் சொல்ல முன் வர மாட்டீர்கள்.

மேலும் ஜெயலலிதாவின் ஓராண்டு ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்புகளிலேயே தெரிந்துவிட்டது. மக்கள் மனநிலை என்னவென்று!

rajamelaiyur said...

//மேலும் ஜெயலலிதாவின் ஓராண்டு ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்புகளிலேயே தெரிந்துவிட்டது. மக்கள் மனநிலை என்னவென்று
//

அய்யயோ .. கருத்து கணிப்பு பற்றி பேசாதீர்கள் .. இதனால் தினகரன் எரிந்த கதை மறந்துவிட்டதா ?

கொக்கரக்கோ..!!! said...

@ ராஜ நடராஜன்..

டெசோவை எங்களுக்கான வாக்கு வங்கியாக நாங்கள் பார்க்கவில்லை. அதாவது ஈழப்பிரச்சினை என்பது எங்களுக்கான வாக்கு பிச்சையெடுக்கும் பிரச்சினை அல்ல.

rajamelaiyur said...

அப்ப டேசொவ ஏன் இலங்கையில் அப்பாவி மக்கள் கொன்று உவிக்கும் போது கூட்டாமல் ஆட்சி போன பின் கையில் எடுக்க வேண்டும் . மக்கள் மரணத்தை விட மகள் முக்கியம் என்பதால் தானே

கொக்கரக்கோ..!!! said...

@ என் ராஜபாட்டை ராஜா,

ஐயோ, எரிகிறது என்று சொல்லாதீர்கள். அதைச் சொன்னாலே மூன்று இளம் மாணவிகள் பஸ்ஸில் வைத்து எரிக்கப்பட்டது தான் நினைவுக்கு வருகிறது.....

rajamelaiyur said...

அப்ப இரண்டுமே மக்களுக்கு உபயோகம் இல்லாத கட்சின்னு ஒத்துகிரிங்க ..

கொக்கரக்கோ..!!! said...

@ என் ராஜபாட்டை ராஜா...

இப்பொழுதும் அவர் மகள் பிணையில் தான் இருக்கின்றார், ஜெயலலிதாவைப் போல!

இலங்கைப் பிரச்சினையை தனித் திரியாக வேண்டுமானால் பேசலாம். ஏனெனில் உங்களைப் போன்ற பலர் கடந்த மூன்று வருட நிகழ்வுகளை மட்டுமே பார்த்து படித்து ஒரு முன் முடிவோடு இருக்கின்றீர்கள். அதனால் இப்படி ப்ளாக்கில் கமெண்ட் போட்டு அதை விளக்கிவிட முடியாது.

கொக்கரக்கோ..!!! said...

//அப்ப இரண்டுமே மக்களுக்கு உபயோகம் இல்லாத கட்சின்னு ஒத்துகிரிங்க ..//

ஆமாம் ராஜா. ஆனால் ஒரு திருத்தம். அந்தக் கொலைகளுக்கு காரணமாகிவிட்ட அழகிரி வகையறாக்களை மட்டுமே நான் எதிர்க்கின்றேன்.

அழகிரி மாறன் வகையறாக்கள் தவிர்த்த ஸ்டாலின் தலைமையிலான திமுகவை (அது வரும் என்ற நம்பிக்கையில்) நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்.

rajamelaiyur said...

ஸ்டாலின் பற்றி குறை கூற ஒன்றும் இல்லை .. ஆனால் அவர் தலைமை வரும்வரை கட்சி இருக்குமா ?

கொக்கரக்கோ..!!! said...

@ என் ராஜபாட்டை ராஜா....

பொருத்திருந்து பாருங்கள்.

vizzy said...

எமெர்ஜென்சியில் இந்திராவிடம் நன்றாக மிதி வாங்கியபிறகும் கூட்டணி வைத்துகொண்டார் அதையும் உடன்பிறப்புகள் கலைஞரின் ராஜதந்திரம் என்றார்கள் ஆனால் மறந்தும் யாரும் அந்த தரையைதொடும் எமெர்ஜென்சிக்கு முந்திய துண்டை போடுவதில்லை.

ரஹீம் கஸ்ஸாலி said...

எப்போதும் கலைஞர் தேர்தல் களத்தை பார்த்து அஞ்சுபவர் அல்ல.... நின்று போராடவே விரும்புவார்.அதனால்தான் தி.மு.க இத்தனை வருடங்களை கடந்தும் இன்னும் ஒரு வீரியமிக்க கட்சியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட கட்சி இன்று புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணித்தது எனக்கு தவறாகவே படுகிறது. நின்று போராடியிருக்கவேண்டும்.

ரஹீம் கஸ்ஸாலி said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
ஸ்டாலின் பற்றி குறை கூற ஒன்றும் இல்லை .. ஆனால் அவர் தலைமை வரும்வரை கட்சி இருக்குமா ?/// இருக்கும் என்பதே உண்மை. எம்.ஜி.ஆருக்கு பின் யார் என்ற கேள்வி வந்தபோது ஜெயலலிதாவையெல்லாம் எம்.ஜி.ஆர். அடையாளம் காட்டவில்லை. அவரை அடையாளம் காட்டியர்கள் திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., பன்ரூட்டி போன்ற அமைச்சர்களும், கானா போன்ற மாவட்ட செயலாளர்களும்தான். அப்படி எம்.ஜி.ஆருக்கு பின் கட்சியே இருக்காது என்று முடிவு செய்யப்பட்ட அண்ணா.தி.மு.க.,வே இன்னும் இருக்கும்போது தி.மு.க.,விற்கு என்ன குறை?

கொக்கரக்கோ..!!! said...

வாங்க ரஹீம் கசாலி....

கலைஞர் தேர்தல் களத்திற்கு அஞ்சுபவர் அல்ல என்று நீங்களே சொல்லும் போது, இப்பொழுது மட்டும் அவர் அஞ்சித்தான் விலகி இருக்கின்றார் என்று எண்ணுகின்றீர்களா?

நிச்சயம் அவரது கணக்கு இந்த பதிவில் சொன்னபடித்தான் இருக்கும்.

ராஜ நடராஜன் said...

கொக்கரக்கோ!பல பின்னூட்டஙகள் உங்களுக்கு வருவது நீங்கள் கட்சி உணர்வு பூர்வமாக சொன்னாலும் ஓரளவுக்கு அறிவுபூர்வமாகவும் கருத்து சொல்கிறீர்களே என்ற நட்பின் மரியாதையின் நிமித்தமே.பின்னூட்டங்களையெல்லாம் கூட கட்சி விளம்பரம்ன்னு இன்னும் வீரியம் மிக்க தொண்டர்களோடு பலமான கட்சி அமைப்புகளோடும் கம்பீரமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று போஸ்டர் ஒட்டிக்கொள்ளாதீர்கள்.

திமுகவின் கம்பீர காலங்கள் என்ன என்பது யாவரும் அறிந்த ஒன்றே.நேற்று கூட காலையில் ஆட்சியை கவிழ்த்துப்புடுவேன்ங்கிற மாதிரி சொல்லி விட்டு மாலையில் ஹி.ஹி..இதெல்லாம் அரசியலில் சகஜமப்பான்னு சறுக்கியதெல்லாம் பெட்ரோல் விலை எரிச்சலிலும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.நீங்கதான் கட்சி கம்பீரத்தை மெச்சிக்கனும்.இன்னுமொரு தன்கட்சி பொன்கட்சி போட்டுக்குறேன்:)

கொக்கரக்கோ..!!! said...

வந்தனம் ராஜ நடராஜன்..... ))

எதிரிக்கட்சியின் பலம் அல்லது பலவீனத்தை இந்த அளவிற்கு அறிந்து/புரிந்து வைத்திருக்கும் உங்களை மனதாற பாராட்டுகிறேன்.....

ஆனால் உங்கள் புரிதலில் நிறையவே பிழை இருக்கின்றது. திமுக என்ற கட்சி வீரியத்தோடு இருப்பது என்பது வேறு. சில அரசியல் காரணங்களுக்காக அக்கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுகள் என்பது வேறு.

நேற்றைய பிரச்சினையில் அவர் பல்டி அடித்ததாகச் சொல்வது முற்றிலும் நடுநிலை ஊடகங்களின் நாடகம் மட்டுமே. அவர் பேச்சின் ஆடியோ அல்லது வீடியோ இருந்தால் வாங்கிப் பாருங்கள் உண்மை புரியும். எந்த இடத்திலுமே அவர் மத்திய அரசுக்கான ஆதரவை இந்த பெட்ரோல் விலை உயர்வுக்காக திரும்பப்பெறுவதாக அறிவிக்கவில்லை. ஊடகங்கள் தான் அதைத் திரித்துச் சொல்லி பிறகு பேட்டியின் போது பல்டி அடித்ததாக தலைப்புக் கொடுத்து விட்டார்கள்.

உங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், வழக்கம் போல கலைஞர் பற்றிய எதிர்மறை செய்திகளை விசாரிக்காமலேயே தீர்ப்பெழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.

உங்களைப் போன்றவர்களின் இந்த மாதிரி நடவடிக்கைகளை மக்கள் இப்பொழுது நன்கு உணர ஆரம்பித்து விட்டார்கள். இனி அரசியலில் எந்த விமர்சனமாக இருந்தாலும் அது ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரானதாக இருந்தால் தான் மக்கள் ரசிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.....

வீரியமிழந்த ஒரு கட்சி தான் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஒரே ஆண்டில் இரண்டு பொதுக்குழு கூட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி முடிக்குமா? வீரியம் இழந்த ஒரு கட்சி தான் உருப்பினர் சேர்க்கையினை இதுவரையிலும் இல்லாத அளவிற்கு அதிக சட்ட திட்ட வரைமுறைகளுடன் நடத்திக் கொண்டிருக்குமா? வீரியம் இழந்த கட்சியின் உட்கட்சி தேர்தலுக்குத் தான் அடித்துப் பிடித்து தொண்டர்களும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் போட்டியிடுவார்களா?

போங்க சார்.... இன்றைக்கு கூட கும்பகோணம் வந்த ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்ப்பைக் கண்டு உளவுத்துறையே ஸ்தம்பித்து நிற்கிறது உங்கள் கவனத்திற்கெல்லாம் இன்னும் மூன்றாண்டுகளுக்குத் தெரியவரப்போவதில்லை. அது வரை இப்படித்தான் நீங்கள் பேசிக் கொண்டிருப்பீர்கள்... ))))

ராஜ நடராஜன் said...

கொக்கரக்கோ!தி.மு.கவின் மீதான காதல் கொண்ட தொண்டர்களின் கூட்டு எண்ணிக்கை இன்னும் கலைஞர் என்ற பெயர்ச்சொல்லால் சிதறாமலே இருக்கிறது என்பது உண்மையே.அப்படியிருந்தும் கூட அதிமுக,தேதிமுக,திமுக என்ற மூன்று நிலை தேர்தல் களத்தில் இடைத்தேர்தலை வென்று விடும் கூட்டுத்தொகை தேறாது என்பதாலேயே கலைஞர் தேர்தலில் வேடிக்கை பார்ப்போமென்று நினைத்திருக்க கூடும்.

திருவாரூர்,கும்பகோணமெல்லாம் ஸ்டாலினுக்கு கூட்டம் சேரும் இடங்க்ளே!மதுரை அதிர்கிறதா:)

கலைஞர் பற்றி எதிர்மறையான செய்திகள் கொண்டு தீர்ப்பெழுதுகினாநல்லாயிருக்குது போங்க!இப்பத்தான் ரோசாவசந்துக்கு டெசோ பற்றி பின்னூட்டம் போட்டு விட்டு வந்தேன்.கொஞ்சம் எட்டிப்பார்த்துட்டு வாங்க!

ஜெயலலிதாவின் ஆட்சி பாதிக்கு பாதி தோசமில்லைங்கிற நிலையில்தான் மக்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.அந்தம்மாவே தன் வாயால் தனக்குத் தானே சூன்யம் வைத்துக்கொள்ளாத வரை அதிமுக காட்டில் இன்னும் மழைதான்.