Tuesday, July 12, 2011

"வாருங்கள் ஸ்டாலின்.... பதவி ஏற்க!!!

2011 ஆம் வருடம், ஜனவரி 17 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

தமிழக அரசியலை, ஆட்சி பீடத்தை அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆக்கிரமிக்கப் போகும் புதிய தலைமுறை அரசியல்வாதிகளை இனம் காணும் ஒரு நேர்மையான அலசல் தான் இந்தப் பதிவு.  வேறு எந்த விதமான சார்பு நிலையோ, உள்குத்தோ. நுண்ணரசியலோ இதில் இல்லை என்று அடித்துக் கூவு(று)கிறேன்.

இந்தியா குடியரசு ஆன பிறகு, கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், வெறும் ஐந்து பேர் மட்டுமே (இதில் ஜானகி, ஓ.பி.எஸ் இவர்களை சேர்க்கவில்லை)  'முதல்வர்' பதவியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப் போனால் அடுத்த ஐந்து ஆண்டுக்கான போட்டியில் கூட இந்தப் பட்டியலில் இருந்து தான் இருவர், முதல் இரண்டு ரேங்க்கில் இருக்கிறார்கள்.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், சூழ்நிலை, இன்னபிற எல்லாம் உயர்ந்திருக்கிறதா அல்லது தாழ்ந்திருக்கிறதா என்று பார்த்தால், இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது உடனடியாக மோசம் என்றும் கூறிவிட முடியாது, அதே சமயம் நற்சான்றிதழும் அளித்து விட முடியாது என்பது தான் நிதர்சனம்.

ஆக தமிழக மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அலுப்பு தட்டியிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. கொஞ்சம் இளமையாக, சுறுசுறுப்பாக, நீண்ட ஆட்சி முறை அனுபவம் உள்ளவராக, படிப்படியாக எல்லா நிலைகளையும் கடந்து அந்தந்த நிலைகளில் அனுபவம் பெற்றவராக,  இதுவரை கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாகவும், திறமையாகவும், மக்கள் பாராட்டும் படியாகவும், ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இதுவரை எழாத வகையில் செயல்பட்டிருப்பவராகவும், மக்களோடு மக்களாக கீழிறங்கி.. திட்டங்களை குறித்த காலத்திற்கு முன்னதாகவே நிறைவேற்றும் சாதுர்யம் கொண்டவராகவும், மக்கள் பிரதிநிதிகள் சபையில் தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு புள்ளி விபரங்களுடன் உடனுக்குடன் பதில் சொல்லும் ஆற்றல் பெற்றவராகவும், எதிர்க்கட்சியினரை வார்த்தைகளால் நோகடிக்காமல் தனிநபர் தாக்குதலின்றி பேசும் தன்மை கொண்டவராகவும்.... இப்படியே இதே ரீதியிலான இன்னும் பல 'வும்' முக்கு சொந்தக்காரராக தள்ளாட்டமின்றி சுறுசுறுப்புடன் நடக்ககூடிய, ஓடக்கூடிய ஒருவர் முதல்வரானால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம் தமிழக மக்கள் அனைவருக்குமே வந்திருப்பது உண்மை தான்.

இது தான் சரியான தருணம். நடந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, படிகளில் ஏற்றி மேலே கொண்டுவரும் சக்தி கொண்ட ஒருவரை முதல்வராக அடையாளம் காணவேண்டிய காலகட்டத்தில் தான் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறோம். சரி இப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்கும் போட்டிக் களத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்று இப்பொழுது பார்ப்போம்.

இன்றைய நிலையில் இந்தப் போட்டியில் சில முக்கியமான கட்டங்களை தாண்டி, ஆட்டத்தில் இருப்பதாக மக்களால் உணரப்படுகிறவர்கள் துரதிருஷ்டவசமாக இருவர் மட்டுமே. ஒன்று விஜயகாந்த், மற்றொன்று ஸ்டாலின். இந்த ஆட்டத்தில் மிக முக்கிய போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய வைகோ, ஏதோ ஒரு பிடிவாதத்தில் தன்னைத்தானே புதை குழிக்குள் சிக்கவைத்துக் கொண்டு தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், ஏன் அடைய விரும்பிய ஒரு லட்ச்சியத்திற்கு கூட விடியலை இன்னும் கானல் நீர் தூரத்திலேயே வைத்திருக்கிறார். பல நாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும், தத்துவங்களையும் கரைத்துக் குடித்திருக்கும் வைகோ, இந்த வலைப்பூவின் தலைப்புக்கு கீழே உள்ள பில் கேட்ஸின் வார்த்தைகளை படித்து நடந்திருந்தால், இன்று வெற்றிக் கோட்டையின் நுழைவாயிலில் முதல் ஆளாக நின்றிருந்திருப்பார்!

மேற்சொன்ன இருவரை தவிர்த்து வருங்கால இளம் தலைமுறை தமிழக முதல்வர் போட்டிக்கு 'நானும் ரௌடி தான்' ஸ்டைலில் சக போட்டியாளராக களத்தில் நிற்பவர்கள் என்று பார்த்தோமானால், டாக்டர் அன்புமணி ராமதாஸ், சீமான், கனிமொழி, நடிகர் விஜய், சரத்குமார், கார்த்திக் சிதம்பரம், யுவராஜ், கார்த்திக், ... இப்படியாக சொல்லும் போதே வாயை மூடிக்கொண்டு சிரிக்கும்படியான பட்டியல் தான் நினைவுக்கு வருகிறது!

எனவே இன்றைய நிலவரத்தை வைத்துப் பார்த்தோமானால், விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் இருவர் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழக முதல்வர் பதவியை ஆக்கிரமிக்கப் போகும் போட்டிக் களத்தில் நிற்கிறார்கள். மேற்சொன்ன பட்டியலில் இருந்தோ அல்லது புதிதாக முளைத்தோ ஓரிருவர் வருங்காலத்தில் (இன்னும் 5 வருடத்தில்) இந்தப் போட்டிக்கு தகுதியானவர்களாக வருவார்களேயானால், அது ஆரோக்கியமான தமிழக அரசியலுக்கு வழிவகுக்கும் என்றே நினைக்கிறேன்.

சரி இப்பொழுது உள்ள போட்டியாளர்களில் முதலாவதாக விஜயகாந்த் ஐ பார்ப்போம். தமிழக வாக்காளர்களில் பெறும்பான்மையானவர்கள், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு மாற்றாக ஒரு பலம் வாய்ந்த தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, சென்ற தேர்தலில் வாராது வந்த மாமணி போல் வந்தவர் தான் விஜயகாந்த். அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, அவர் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

அது வரை எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதன் பிறகு அடுத்த அடிக்கு அவர் முன்னேறினாரா என்று கேட்டால் அவரே கூட இல்லை என்று தான் சொல்வார். இப்பொழுது கூட சென்ற தேர்தலில் தான் பெற்ற வாக்கு சதவிகிதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, வரும் தேர்தலில் தன் கட்சிக்கு கூடுதலாக இவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று பேசவில்லை. தன் கட்சி சார்பாக தனக்கு கிடைத்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை கொஞ்சம் கூட மதிக்காமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓரிரு முறை மட்டுமே சட்டசபைக்கு சென்றுள்ளார்.

கேட்டால் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் எல்லாம் இதே தவறை செய்யவில்லையா? என்று கேட்பார். உண்மை தான். அவர்கள் யாருமே முதல் முறை எம்.எல்.ஏ ஆன போது இந்த தவறை செய்யவில்லை. மேலும், குறைந்த பட்சம் அவர்கள் கட்சிக்காரர்களாவது ஒத்துக் கொள்ளும் வகையில் அதற்கான ஒரு நியாயத்தை கற்பித்துச் சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி என்ன சாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டு சட்டசபை செல்வதை தவிர்த்தார்? சரி ஒரு ஒழுங்கான எதிர்க்கட்சி தலைவராகவாவது நடந்து கொண்டாரா? ஜெயலலிதா செய்வதைப் போல் ஒரு எதிரிக் கட்சி தலைவராகத்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கிறார்!

இவர் செய்ததை எல்லாம் தான் ஏற்கனவே ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறாரே. அந்த இருவருக்கும் மாற்றாகத்தானே மக்கள் இவரைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் செய்வதையே இவரும் செய்தால் மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்கனம் மீண்டும் இவரை ஆதரிப்பார்கள்? சரி எம்.ஜி.ஆர். -ன் பிரதிபிம்பமாக தன்னை காட்டிக்கொள்ள விரும்பும் இவர், அவரைப் போன்ற மேடை நாகரீகத்தையோ, கட்சித் தொண்டர்களிடமுமான அணுகுமுறையையோ கடைபிடிக்கிறாரா?

இதே ரீதியில் தனிப் பதிவே போடும் அளவிற்கு, விஜயகாந்த் தனது கட்சியின் வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதை தவிர்த்து வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்ற விஷயங்களைப் பட்டியலிடலாம்.

அடுத்த போட்டியாளரான ஸ்டாலினைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். இந்தப் பதிவின் நான்காம் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்தாலே பாதி விஷயங்கள் விளங்கிவிடும். அடுத்த 20 வருடங்களுக்கான தகுதியான தமிழக முதல்வர் போட்டியின் முதலிடத்தில் இருப்பவர் இவர் தான் என்று! இதைப் படிக்கும் பொழுது இது ஒரு 'சார்புநிலை' வாதம் என்று எண்ணுபவர்கள், இந்த இடத்திற்கு தற்பொழுதைய நிலையில் வேறு ஒருவரை பொறுத்தி வாதிட்டால் பதில் கூற நானும் தயாராயிருக்கிறேன்.

எமர்ஜென்ஸிக்கு முன்னதாகவே ஆரம்பித்து, சற்றேரக்குறைய 37 வருட கால முழுநேர அரசியல் அனுபவம்; ஒரு புது கட்சியை ஆரம்பித்து நடத்துவது போல தி.மு.க வின் இளைஞர் அணியை ஆரம்பித்து, கட்டமைத்து, அதற்கென்று தனி அலுவலக கட்டிடம், அணிவகுப்பு, மாநாடு, இத்தியாதி, இத்தியாதி என்றெல்லாம் வளர்த்து, அதன் பொருப்பாளர்கள் பலரும் இன்று ஆட்சிப் பொருப்பிலும் பங்கேற்கும் நிலையினை ஏற்படுத்தி, சுதந்திர இந்தியாவில் அறுபது ஆண்டுகால பழமையான பிராந்திய கட்சி இன்றைக்கும் மங்காத பொலிவுடன் செயல்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது ஸ்டாலின் ஈன்றெடுத்து வளர்த்த அந்த இளைஞரணி தான் என்பதை தி.மு.க தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர்வரை எவரும் மறுப்பதற்கில்லை.

கருணாநிதியின் மகன் என்ற காரணத்தால் தான் இப்படி வளர்ந்தார் என்பவர்களுக்கு, கருணாநிதியின் மற்ற பிள்ளைகளுக்கு இப்படியொரு பொறுமையும், நிதானமும் இருந்ததில்லை என்பதோடு இப்பொழுது களத்தில் நிற்பவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதைப் பற்றிய பதிவல்ல இது என்பது தான் என் பதில்.

தான் சென்னை மாநகர மேயராக பொறுப்பிலிருந்த போதாகட்டும், உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆற்றும் பணியாகட்டும், துணை முதல்வராக அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் பாங்காகட்டும், இதில் எங்குமே தாந்தோன்றிதனமாக நடந்து கொண்டதான குற்றச்சாட்டோ, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டதாக பேச்சோ அடிபடவில்லை. சென்னையில் கட்டிய மேம்பாலங்களில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்து, கட்டிய பாலங்களை உடைத்து பரிசோதித்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் திருவாளர் பரிசுத்தமாக விடுதலை ஆனார்.

வெளிநாட்டு தொழிற் குழும பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பெரிய பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவர அவர் காட்டும் ஆர்வம், அவர் ஆளுகையின் கீழ் தமிழகம் வந்தால் தொழில் துறையில் தமிழகம் தன்னிறைவடையும் என்பது திண்ணம். 'சிங்காரச் சென்னை' என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரபலமாக்கிய அவர் ஆட்சிப் பொறுப்பேற்றால் கூவம் ஆற்றில் குட்டிக் கப்பல் ஓடலாம், மெட்ரோ ரயில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப் படலாம்,.... இப்படியே இன்னும் பல 'லாம்' கள் சேர்ந்து சென்னை சொர்க்கமாக மாறுமா? மாறாதா? என்பதை... ஸ்டாலின் மனோநிலையை நன்கு அறிந்த சென்னை வாசிகளின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்!

ஏனென்றால் கே.ஏ.கே. மறைவிற்குப் பின் நடந்த ஒரு தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் என்ற முறையில் 'சோ' அவர்களிடம் பேட்டி கண்ட பொழுது, கருணாநிதியை முழுமையாக எதிர்த்தாலும், எங்கள் தொகுதிக்கான சிறந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஸ்டாலினை ஆதரிப்பதாக சொல்லியிருந்தார். அதேப்போல் சுனாமி நிவாரண நிதியை வீண் கௌரவம் பார்க்காமல், நேரில் சென்று, காத்திருந்து ஜெயலலிதாவை சந்தித்து கொடுத்தது... இவை எல்லாமே எதிர்ப்பாளர்களிடமும், எதிரிகளிடமும் தன்னுடைய நிதானமான, தெளிவான செயல்பாடுகளால், தமிழகத்தின் பொது பிரச்சினைகளான இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு, போன்ற இன்னபிற பிரச்சினைகளில், முக்கிய எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சியினருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கோரிக்கைகளை ஒரே குரலாக தமிழகத்திலிருந்து எழுப்பி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் உண்மையான நியாயம் கிடைக்கப் போராடும் தலைவராக திகழ்வார் என்பதை காட்டுகிறது.

கருணாநிதியால் தான் ஸ்டாலின் வளர்ந்தார் என்பது ஒரு கோணத்தில் உண்மை என்றாலும், அதுவே தான் அவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை என்பதையும் மறுப்பதற்கில்லை. இப்பொழுது கருணாநிதி அமைச்சரவையில் ஒரு மந்திரி என்ற வகையில் அவர் தன்னுடைய கடமைகளை உள்ளாட்சியில் மிகத்திறமையாகவும், எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, கிராமத்துப் பெண்களிடம் பெரிய அளவிற்கு அபிமானத்தையும், ஆதரவையும் பெற்ற நபராகத் திகழும் அளவிற்குமாகவும் செயல்படுகிறார்.

வறுமையில் பிறந்து, வளர்ந்த கருணாநிதிக்கு பணமும், பதவியும் ஒரு லட்சியக் கனவாக இருந்து, அதற்காக பல சமயங்களில் மக்கள் நலனுக்கு எதிராக சமாதானங்களை செய்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் செல்வத்தில் பிறந்து, முழுநேர அரசியலுக்கு வந்தபின்பும், எம்.எல்.ஏ வாக இருந்தும்,  12 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்தும், கடந்த ஐந்து வருடங்களாக மட்டுமே அமைச்சர் பதவியில் இருக்கும் ஸ்டாலின், அதற்கெல்லாம் மசிபவராகத் தெரியவில்லை. அவருக்குத் தேவை பேர், புகழ் அவ்வளவுதான். இதுவரைக்குமான அவரது செயல்பாடுகள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.

மேலும் சில தினங்களுக்கு முன் கருணாநிதி, அடுத்த முதல்வராக வர தனக்கு விருப்பமில்லை என்று சற்றுத் தெளிவாகவே அறிவித்து விட்டார். வரும் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று தெரியவில்லை.என்றாலும் 'இது ஒன்று மட்டுமே களம் இல்லை',  நிறையவே இருக்கின்றன, ஆதலால் "வாருங்கள் ஸ்டாலின்..... பதவி ஏற்க!!!

1 comment:

முரளிகண்ணன் said...

நல்ல கட்டுரை சௌமியன்.